சனி, 28 ஜூலை, 2012

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே





ஒரு நதி போல வேர்களில் ஒட்டியிருக்கும் மண்ணையும் பூக்களில் படிந்திருக்கும் வாசத்தையும் வருடிக்கொண்டே நடக்கிறது என் வாழ்க்கை!
என் டைரியின் பக்கங்களை மிகப்பழைய நாட்களுக்குத் திருப்புகிறேன். மங்கலான காட்சிகள் விரிகின்றன.
ஒரு ட்ரங்கு பெட்டி, ஒரு மூட்டை சாமான்கள் இவற்றோடு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் பல இளஞ்ஜோடிகள் பலபல ஊர்களில் கூடுகளைவிட்டு குடிபெயர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், .
பண்டக சாலை  நிறுவனத்தில் என் தந்தை,  என் அம்மாவும் வாழ்க்கையின் பற்சக்கரத்தை சுழற்ற ஆரம்பித்த நேரம்!
 என்னோடு என் கனவுகளோடு கைகுலுக்க முடியாத பொழுதுகளில் என் குழந்தைப்பருவ துள்ளல்களை ஆசைகளை ஏக்கங்களை ஆசிர்வதித்தவர் பெத்தாட்டும்மா
என் இரண்டு வயது இதயத்திற்குள் நிரம்பி வழிந்த தனிமையை ஒரு குதூகல நந்தவனமாய் தினந்தோறும் மாற்றியவர்  பெத்தாட்டும்மா.
அவரைப்போன்ற ஒரு அரிய ஜீவனை இந்த பொருளாதாரத்திற்கு அலைபாயும் பொழுதுபோக்கு உலகில் நான் கண்டதே இல்லை
படிப்பார்வம் பல்கிப் பெருகியதைக் கண்டு பள்ளியில் நான் படித்து பட்டம் பெறுவதைவிட உலகப்படிப்பை நான் படிக்க ஆரம்பித்தில் என் தந்தை மிக மகிழ்ந்து நெகிழ்ந்துபோனார்.
உடைத்தெறிந்த போது கொஞ்சமும் கலங்காமல் என்னை அரவணைத்து அடிபடும் கல் சிலையாகும், அடிபடாத கல் எல்லோரும் மிதிக்கும் படியாகும் என்று திடமும் தன்னம்பிக்கையும் டன் கணக்கில் எனக்கு அள்ளிக் கொடுத்தவர் என் அப்பா!
ஆரம்பப் பள்ளி தொடக்கி பதினொன்று பனிரெண்டாம் வகுப்புகளில் எனக்கு அமைந்த ஆசிரியர் பெருமக்கள் மிகவும் அன்பிற்குரியவர்கள்.
என் ஞாபகப் பக்கங்களை திருப்பிக் கொண்டே வரும்போது, உணர முடிகிற உண்மை ஒன்று உண்டு.
போராடாமல்  வாழ்க்கை இல்லை, நான் போராடாத நாட்கள் இல்லை. போராட்டங்கள் எனக்குப் பழகி விட்டது. போராட எனக்குப் பிடிக்கிறது.
தொடரும் என் போராட்டங்கள் உங்கள் அன்போடு!

வியாழன், 19 ஜூலை, 2012

ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்


ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்

அல்குர்ஆன் வாழும் வேதம் மட்டுமல்ல! அது ஆளும் வேதம் என்பதை ஒவ்வொரு ரமளானும் நிரூபித்துக் காட்டுகின்றது. நாம் பாராத புதுப் புது முகங்கள்! அதுவரை பள்ளி பக்கமே வாராதிருந்து இப்போது பள்ளியில் அடியெடுத்து வைத்த எத்தனையோ தோற்றங்கள்!
ஐந்து நேரத் தொழுகைகளில் ஆட்கள் அதிகரிப்பு! பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று எண்ணும் அளவுக்கு பள்ளியில் மக்கள் நெருக்கமும் இறுக்கமும் ஏற்பட்டு பள்ளி நிரம்பி வழிந்தது. இவ்வளவு சிறப்பும் எதனால்? அல்லாஹ் இம்மாதத்தில் குர்ஆனை இறக்கியருளியதால்! குர்ஆன் இறங்கிய லைலத்துல் கத்ர் அம்மாதத்தில் அமைந்திருப்பதால்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த இரவை ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாக ஆக்கி வைத்தான். இம்மாதத்தில் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவோருக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்குவதாக வாக்களித்தான். அதன் பலனை சிம்பாலிக்காக வெளிப்படுத்தும் விதமாக சுவனத்தைத் திறந்து வைத்து நரகத்தை மூடினான்.
இதனால் கொஞ்ச நஞ்ச ஈமானிய உணர்வு உள்ளவர்களும் இம்மாதத்தில் அல்லாஹ் அளிக்கும் அரிய வாய்ப்பைப் பெற வேண்டி படையெடுத்து வந்தார்கள். உண்மையில் ரமளான் இவர்களை இரவிலும் பகலிலும் சிறைப்படுத்தி வைத்திருந்தது.

அந்த வகையில் ரமளான் அவர்களைக் கைது செய்து, நற்பண்புகளைப் போதித்த ஒரு சிறைச்சாலை!
நல்ல பாடங்களைப் படித்துக் கொடுத்த ஒரு பாடசாலை!
இறையச்சத்தில் ஊனமாகிப் போய் கிடந்த சகோதரர்களை இறையச்சத்தின் பக்கம் நடை பயில வைத்த நடை வண்டி!
இந்த ரமளான் மாதத்தில் பெற்ற பண்புகள் என்ன? பாடங்கள் என்ன? என்று பார்ப்போம்.
ஐந்து நேர ஜமாஅத் தொழுகைகளில் தவறாது கலந்து கொண்டோம். இரவு நேரங்களில் தொழுதோம். சப்தங்கள் அடங்கிப் போன ஸஹர் நேரத்தில் விழித்து பிரார்த்தனை செய்தோம்.
இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவோரகவும் (இருப்பார்கள்) (அல்குர்ஆன் 3:17)
இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவார்கள். (அல்குர்ஆன் 51:17,18)
என்று அல்லாஹ், சுவனத்திற்குரிய முஃமின்களின் பண்புகளைக் கூறுவது போன்று குறைவாக உறங்கி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினோம். இவற்றை ஏன் செய்தோம்? நன்மையை நாடித் தானே செய்தோம்? இதே காரியத்தை நாம் ரமளானுக்குப் பின்னாலும் தொடர்ந்து செய்தால் என்ன? இவ்வாறு நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.
இந்த அமல்கள் அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் வரை தொடர்வோம்.
ரமளானின் பகல் காலங்களில் அனுமதிக்கப்பட்ட உணவு, பானத்தை சாப்பிட மறுத்தோம். ஏன்? அல்லாஹ் தடுத்திருக்கின்றான் என்பதால் தானே! அப்படியாயின் வட்டி, லாட்டரி, லஞ்சம், மது, சூது, திருட்டு, கொள்ளை, மோசடி இவற்றின் மூலம் வரும் வருவாயை நாம் சாப்பிடலாமா?
நோன்பின் பகல் காலத்தில் தடை பிறப்பித்த அல்லாஹ் தானே இவற்றின் மீது எந்தக் காலத்திலும் தடை விதித்திருக்கின்றான். இதுபோன்ற காரியங்களில் நாம் ஈடுபடலாமா? என்பதை உணர்ந்து விலகவே ரமளான் என்ற பள்ளிக்கூடம் நம்மிடம் பாடம் நடத்த வந்தது. இந்தப் பாடத்தை அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் வரை தொடர்வோம்.
அருகில் அனுமதிக்கப்பட்ட மனைவி படுத்திருக்கின்றாள். அக்கம் பக்கத்தில் யாருமில்லை. இருந்தும் ரமளானின் பகலில் நோன்புக் காலத்தில் நாம் நெருங்கவில்லையே! ஏன்? அல்லாஹ் பார்க்கின்றான் என்ற உணர்வு தானே! ரமளான் மறைந்த பின் அல்லாஹ் பார்க்காமல் மறைந்து போய் விடுவானா? நிச்சயமாக மறைய மாட்டான். அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
நாம் இங்கே படித்த பாடம் நம் மனைவியை ரமளானில் பகல் காலங்களில் நாம் நெருங்காத போது, பிறன் மனையை ஏறிட்டுப் பார்க்கலாமா? அந்நியப் பெண்களைப் பார்க்கலாமா? பெண்களின் அங்க அவயங்களை குளோஸ்அப்பில் காட்டும் டிவி, சினிமாக்களைப் பார்க்கலாமா?
ரமளானில் பார்த்துக் கொண்டிருந்த அதே ரப்புல் ஆலமீன் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற பாடம் நம்மிடம் அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் வரை தொடரட்டும்!
உளூச் செய்கின்றோம். அப்போது தாகத்தால் நாம் தவித்துக் கொண்டிருக்கும் போது வாய் கொப்பளிக்க சுவையான தண்ணீரை வாயில் அனுப்புகின்றோம்.
தொண்டைக் குழிக்குள் அந்தத் தண்ணீர் இறங்குவதற்கு ஒரு மயிரிழை அளவு தான் இருக்கின்றது. ஒரு சொட்டு தண்ணீர் இறங்கினால் யாருக்குத் தெரியப் போகின்றது? ஏன் விழுங்கவில்லை? அல்லாஹ் பார்க்கின்றான் என்ற உணர்வு தான்!
அனுமதிக்கப் பட்ட பானத்தையே ரமளானில் பகல் காலத்தில் பருகவில்லையே! ரமளான் முடிந்த பின்னர் தடுக்கப்பட்ட மது பானங்களை அருந்தலாமா? ரமளானில் பார்த்த அதே நாயன் தான் இப்போதும் பார்க்கின்றான். அதனால் ரமளானைப் பாடமாகக் கொண்டு தடை செய்யப் பட்ட பானங்களை ஆயுள் முழுவதும் தொடாமல் விலகுவோமாக!
சங்கிலித் தொடராக புகை பிடிப்பவர்கள், நோன்பு நோற்றதிலிருந்து நோன்பு துறக்கும் நேரம் வரை பீடி, சிகரெட் புகைப்பதில்லை. உயிர்கொல்லியான இந்த நெருப்புக் கொள்ளிக்கட்டையை வாயில் வைக்காமல் இருந்ததற்குக் காரணம் என்ன? அல்லாஹ் பார்க்கின்றான் என்ற காரணம் தானே! அதே காரணம் ரமளானுக்குப் பிறகு அறுந்து போகுமா?
நோன்பு நோற்கும் போது பார்க்கும் அந்த அல்லாஹ் தான் நோன்பு துறந்த பின் இரவு நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான். ரமளான் முடிந்த பின்னரும் அவன் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதால் நோன்பு நோற்கும் போது புகைப் பழக்கத்தை விட்ட நாம் இப்போதும் அதே இறையச்சத்துடன் விட முடியாதா? முயற்சி செய்தால் முடியும். எனவே புகைப் பழக்கத்தை அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் வரை விட்டொழிப்போமாக!
ரமளானில் ஏழைக்கு இரங்கினோம். அனாதைகளை அரவணைத்தோம். உறவினர்களுக்கு உதவி செய்து அவர்களிடம் ஒன்றிணைந்தோம். ஏன்? அல்லாஹ் பார்க்கின்றான் என்று தானே! ரமளான் முடிந்த பிறகும் அந்தக் காரணம் தொடரும் போது நாமும் இந்த நன்மைகளை ரமளானுக்குப் பிறகு அடுத்த ரமளான் வரை என்றில்லாமல் ஆயுள் வரை தொடர்வோம்.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால், நான் நோன்பாளி என்று அவர் கூறட்டும் என்ற புகாரி 1904வது ஹதீஸின் படி நோன்புக் காலத்தில் யாரேனும் நம்மிடம் சண்டைக்கு, வம்புக்கு வந்தால் விலகி விடுகின்றோம். ஏன்? ஒரு தரப்பு இறங்கிப் போகின்ற போது எதிர் தரப்பு ஏறுவது கிடையாது. எகிறிக் குதிப்பது கிடையாது. இதன் மூலம் ரமளானில் வம்புச் சண்டைக்கு வருவோரிடம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றோம்.
இதே போன்று ரமளானுக்குப் பிறகும் அல்லாஹ் நம்மைப் பார்க்கின்றான் என்ற அடிப்படையில் ஒரு தரப்பாகிய நாம் இறங்கிப் போகின்ற போது அமைதி வாழ்கின்றது. சுபிட்சம் ஏற்படுகின்றது. இப்படி சுபிட்சமான பாடத்தை ரமளானுக்குப் பிறகும் அடுத்த ஆண்டு வரையில் அல்ல! ஆயுள் வரை தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

வியாழன், 12 ஜூலை, 2012

நான் அனுப்புவது கடிதம் அல்ல......

நான் நல்லூர் உஸ்மான் பேசுகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்
ursday, June 23, 2011
என் இனிய நட்புகளே
நீண்டதொரு இடைவெளிக்குப் பின் உங்களை
இந்தத் தொடர்பாடல் மூலம் சந்திக்கிறேன் 
இது உங்களையும் உங்கள் உறவுகளையும்
பரிபூரண உடல் நலத்துடனும் உள்ளன்பு மாறாத
உயர்ந்த எண்ணத்தோடும் வந்து சந்திக்கட்டுமாக
அமீன் !

கடிதம் எழுதுவதால் தகவல்கள் மட்டும் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. கடிதம் என்கின்ற இலக்கிய மொழியினூடாக ஆழமான மனித உணர்வுகளும் சேர்ந்து பயணிக்கின்றன. கடிதம் என்பது மிகவும் அழகான ஓர் தொடர்பாடல் முறை. கடிதம் எழுதுவதன் மூலம் எமது மொழியின் வளம் மேலும் செம்மைப் படுத்தப்படுகின்றது. புதிய புதிய சொற்றொடர்களை பயன்படுத்தி அழகான வாக்கியங்களை உருவாக்கி தரமான கடிதங்களை எழுத பழகிக் கொண்டோமென்றால் கதை கட்டுரை நாவல் என்று எமது சிந்தனையும் விரிவடையும். ஆனால் இன்று கடிதம் எழுதும் பழக்கம் மருவி வருகின்றது. மனித ஆசைகளை ஆதங்கங்களை அழுகையை ஆளுமையை பகிர்ந்து கொண்ட ஓர் ஊடகத்தின் முக்கியத்துவம் குறைந்து வருகின்றது. கடிதத் தொடர்பாடல் மூலம் உருவாகும் உணர்வு ரீதியான தொடர்பு இன்று காணாமல் போய்விட்டது. தொழில்நுட்ப முன்னேற்றம் எமது வாழ்கை முறையை சுலபமாக்கியிருப்பது ஒரு விதத்தில் சந்தோசமாக இருந்தாலும் அன்றாடம் பரிமாறிக்கொண்ட ஆத்மார்த்தமான உணர்வுகளை மழுங்கடிக்கப் பண்ணியது வேதனையான விடயமாகும். முன்பெல்லாம் பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவேன். இப்போது எனது தாய்க்கு கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்தாலே எதை எழுதுவது என்ற யோசனை. தொலைபேசியில் இரண்டு வார்த்தைகளைப் பேசுவது சுலபமாகத் தெரிகின்றது. அதுவும் வேலையில் இருந்து வீடு திரும்புகின்றபோது காருக்குள் இருந்து மொபைல் தொலைபேசியில் அழைப்பெடுத்து கதைத்தால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் என்று பெருமையாக நினைக்கத் தோன்றுகின்றது.


அவசரமான உலகத்தில் வாழ்வதால் எத்தனை அரிய விடயங்களை இழந்து கொண்டிருக்கின்றோம். எங்கு பார்த்தாலும் அவசரம். ஆலயத்திற்கு சென்றாலென்ன மருத்துவமனைக்கு சென்றாலென்ன விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கு சென்றாலென்ன எதிலும் எப்போதும் அவசரம்தான் பொங்கி வழிகின்றது. சிறியவர்கள் பெரியவர்கள் என்ற பேதமின்றி எல்லோரும் அவசரமென்ற பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றோம். ருசித்து சுவைக்க வேண்டிய வாழ்க்கையை நஞ்சை விழுங்குவது போன்று மென்றி விழுங்கிக் கொண்டிருக்கின்றோம். ஏன் இந்த மாற்றம் எதை அடைவதற்காக இத்தனை இழப்புகள். இழப்புக்களென்று தெரிந்தும் அவற்றை ஏற்றுக்கொண்டு சலனமற்றிருக்கின்றோம்
பக்கம் பக்கமாக கடிதம் எழுதிய காலம் மாறி வாழ்த்து அட்டைகளை கைபடத் திறந்து குதூகலித்த காலம் மாறி குறும் செய்திகளும் தொலைபேசிக் குறிப்புகளுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. பொறுமையாக கடிதமெழுதி அழகான கையெழுத்தில் முகவரி எழுதி முத்திரை ஒட்டி பக்குவமாக அஞ்சல் செய்யும் நிலைமை இன்று காணாமலே போய்விட்டது. காகிதத்தில் எழுதிய வார்த்தைகளை அனுபவிக்கின்ற சுகம் இப்போது பாவனையில் இருக்கின்ற மின் அஞ்சல் மூலமாக கிடைக்கின்றதா? முன்பெல்லாம் பிறந்தநாள் திருமணநாள் பொங்கல் தீபாவளி போன்ற தினங்களுக்கு நண்பர்கள் உறவினர்களிடமிருந்து வாழ்த்து அட்டைகள் வீடுவந்து சேரும். அவற்றிற்கு நாம் கொடுத்த முக்கியத்துவம் மதிப்பு என்பனவற்றை வார்த்தைகளால் சொல்லி முடியுமா? இன்று நாம் எதற்கும் முக்கியத்துவம் தருவதில்லை. நேசம் பாசம் நட்பு காதல் என்று எதைப்பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. எல்லாமே நிலையற்றது என்ற உணர்வு சிந்தனையில் பதிந்துவிட்டதோ என்னவோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையில்தான் வாழ்க்கை ஓடுகின்றது. உறவுகளோடு தொடர்பு கொள்வதற்குக்கூட காரணத்தைத் தேடுகின்றோம். தேவை ஏற்படாத பட்சத்தில் யாரும் யாரையும் பார்க்கவோ பேசவோ விரும்புவதில்லை. இந்த பக்கம் வந்தேன் உங்களையும் ஒருக்கால் எட்டிப் பார்த்துவிட்டுப் போவோம் என்று உரிமையோடு கூறிக்கொண்டு யாரும் யார் வீட்டிற்கும் செல்வது கிடையாது. தான் உண்டு தன் வேலையுண்டு என்ற சிந்தனையில் ஒருவரையொருவர் நினைத்துக் கூடப் பார்க்காது அவரவர் தத்தமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இயந்திரத்தனமாக நாம் மாறிவிட்டோம்.

எத்தனை வகையான கடிதங்கள். தாய் தனது பிள்ளைகளுக்கு எழுதும் கடிதம் பாசத்தை வெளிப்படுத்துவதாகவும் தந்தை தனது மகனுக்கு அறிவுரைகளை எழுதிக் குவிப்பதாகவும் நண்பர்கள் அந்தரங்க விடயங்களை உரிமையோடு பரிமாறிக்கொள்வது போன்றும் காதலர்கள் கடிதங்கள் மூலமாக தமது இச்சைகளை, வாக்குறுதிகளை, பொய்களை, பெருமைகளை பரிமாறிக்கொள்வதாகவும் எத்தனை எத்தனை வகையான கடிதங்கள். அன்புள்ள என்று ஆரம்பித்து நீ நலமா நான் நலம் என்று தொடர்ந்து இலக்கண இலக்கியத்துடன் கடிதங்கள் எழுதப்படவேண்டும் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுவயதில் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இப்போது நான் காகிதத்தில் கடிதம் எழுதுவதேயில்லை. கணணியில் நேரடியாகவே தமிழில் எதை எழுதவேண்டுமோ அதை எழுதிவிடுவேன். பேனாவினால் காகிதத்தில் எழுதாமல்விட்டு எனது எழுத்துக்கள்கூட ஒழுங்காக வருவதில்லை. எத்தனை வருடங்களாகி விட்டன அன்பான ஓர் கடிதம் எழுதி. புலம்பெயர்ந்தபோது கொடூரமான கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அலுமாரியின் மேல்தட்டிலும் கட்டிலுக்கு அடியிலும் ஒளித்து வைத்த சில கடிதங்களையும் வாழ்த்து அட்டைகளையும் புகைப்படங்களையும் கவனமாக என்னோடு எடுத்துக்கொண்டு வந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றைத் திரும்பவும் எடுத்து வாசிக்கின்றபோது மனதுக்கு ஆறுதலாக இருக்கும். அவற்றை வாசிப்பதன் மூலம் அன்பைத் தெரிவித்தவர்களின் வாசத்தை மீண்டும் சுவாசிக்கக் கூடியதாக இருந்தது. இன்று அந்தக் கடிதங்களும் என்னோடு இல்லை நிகழ்கால இறுக்கங்களை தளர்த்துவதற்கு அந்த நினைவுகளும் என்னோடு இல்லை. காலம் எப்படி மாறிப்போய்விட்டது.
சிறுவயதில் எனது மாமாமார் என்னை அடிக்கின்றபோது அவர்களைத் திட்டித்தீர்க்கும் வகையில் கடிதம் கடிதமாக எழுதுவேன். அதன்பின்பு அவற்றை கட்டில் மெத்தைக்கு கீழ் வைத்துவிடுவேன். பின்பு நீண்ட நாட்களுக்குப்பின் அவற்றை மீண்டும் எடுத்து வாசித்து சிரித்துக் கொள்வேன். நீங்கள் முன்பு எழுதிய கடிதங்கள் உங்கள் கைவசம் இருந்தால் அவற்றை மீண்டும் தூசிதட்டி வாசித்துப்பாருங்கள். பல சுவாரசியமான விடயங்களை அவை உங்களோடு பேசும். நீங்கள் அனுபவித்த அழகான நாட்களை மீண்டும் உங்கள் மனதில் மலரச் செய்யும்.

தொடர்பாடல்கள் மிகவும் துரிதமாகவும் பல்வேறு வடிவங்களிலும் எளிதாகவும் கிடைக்கின்றபோது கடிதம் எழுதுகின்ற தேவை குறைந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் கடிதம் எழுதுவது அறவே நின்றுவிட்டது என்றே கூறலாம். இன்று என்ன சமையல் அம்மா என்று ஈழத்தில் இருக்கும் எனது தயாருடன் நினைத்த மாத்திரத்தில் பேசக்கூடியதாக இருக்கின்றபோது கடிதம் ஏன் எழுதவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. பொதுவாக வெளிநாட்டில் இருந்து மகளிடம் இருந்து வருகின்ற கடிதம் ஒரு தாய்க்கு தனது மகளாகவே தோன்றும். அந்த கடிதங்களை வருடுகின்றபோது வாசிக்கின்றபோது தனது மகளின் தலையை கோருவது போன்ற உணர்வை ஓர் தாய்க்கு கொடுக்கும்.
இப்படியாக மனிதர்கள் தேக்கி வைத்திருக்கும் அன்பும் பாசமும் பகிரப்படாமலே தொலைந்து போய்விடப்போகின்றதே என்ற ஏக்கம் கால ஓட்டத்தோடு அதிகரித்துக் கொண்டே போகின்றது.

கடிதம் எழுதுவதற்கு ஒரு தனியான மனநிலை தேவை என்று சிலர் சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரையில் சில மணிநேரங்கள் எனக்கு கிடைக்குமென்றால் அழகான ஒரு கடிதம் என்னால் எழுதமுடியும். அந்த நேரத்தில் உள்ள மனநிலையைப் பொறுத்து அக் கடிதத்தின் வடிவம் உருவம் எடுக்கும். அநேகமாக புலம்பெயர்ந்தபின்பு கடிதம் எழுதுகின்றபோது ஏக்கம்தான் அதிகமாக பிரதிபலிக்கும்.

சொல்வதற்கு ஏகப்பட்ட விடயங்கள் இருக்கின்றன. ஒன்று மட்டும் உண்மை கடிதம் தரும் அந்தரங்க உணர்வை நாம் இன்று இழந்துவிட்டோம். இப்போதெல்லாம் தொலைபேசி மூலம் உறவுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு எங்கள் வேலையில் கவனத்தை செலுத்துகின்றோம். பிரிவுத் துயரோ அதன் மூலம் ஏற்படுகின்ற ஏக்கமோ இன்று இல்லவேயில்லை. இ மெயிலின் மூலம் உடனுக்குடன் தொடர்பு கொள்கின்றோம். சிறிது தாமதம் ஏற்பட்டால் உடனே தொலைபேசியில் அழைப்பெடுத்து விசாரித்துக் கொள்கின்றோம். அதுவுமில்லை என்றால் உடனே குறுஞ்செய்தி பேஸ்புக் ருவிட்டர் என்று எத்தனையோ. இன்றெல்லாம் யாரும் யாருக்காகவும் காத்திருக்கவே தேவையில்லை. காத்திருப்பே இல்லாதபோது எதற்காக கவலைப்படவேண்டும். ஒருவருக்காக கவலைப்படுவது அவரைக் காணாமல் ஏக்கம் கொள்வது பிரிவையெண்ணி கண்ணீர் விடுவது எல்லாமே ஒரு உணர்வு பூர்வமான செய்கைகள் அல்லவா? அவற்றை மீண்டும் அனுபவிக்கவேண்டும் என்ற ஏக்கம் இப்போது மிஞ்சியிருப்பதும் உண்மையல்லவா? எமக்கு விருப்பானவர்களை பிரிந்து தனியாக இருக்கும் போதுதானே அவர்களைப்பற்றி அதிகமாக நினைத்து அவர்களது அருமையை உணர்ந்து கொள்ளமுடியும். ஆனால் அந்த பிரிவுக்கான சந்தர்ப்பமே இப்போது கிடைப்பதில்லையே. 5 நிமிடத்திற்கு ஒரு தடவை தொலைபேசியில் அழைப்பெடுத்து என்ன செய்கிறாய் எங்கேயிருக்கிறாய் என்று கேட்கின்றபோது இது என்ன பொலீஸ் வேலையா எதற்காக இப்படிக் கண்காணிக்கின்றோம் என்று எரிச்சல்படத் தோன்றுகின்றது. முன்பெல்லாம் நெருங்கிய உறவினர்கள் ஊர்விட்டு ஊர் போகும் போது அவரோடு ரயில் நிலையங்களுக்கோ பஸ்தரிப்பு இடங்களுக்கோ சென்று அவரை வழியனுப்பி கண்ணீரோடு திரும்பும் எத்தனையோ நிகழ்வுகள் ஏற்பட்டதுண்டு. இப்போது காரிலேயே கொண்டு சென்று விமான நிலையத்தில் இறக்கிவிட்டு காருக்குள் இருந்தபடியே Have a Safe Trip என்ற வாழ்த்திவிட்டு அப்படியே U Turn எடுத்து வீடு நோக்கி சென்று கொண்டிருப்பேன். சில நிமிடங்களின்பின் அழைப்பெடுத்து எல்லாம் சரியா என்று கேள்விவேறு. தொழில் நுட்பத்துடன் சேர்ந்து நாமும் நன்றாக வளர்ந்துவிட்டோம். நெருக்கமும் உறவும் கசப்பும் வெறுப்பும் விரோதமும் பகைமையும் எல்லாமும் குறைவாகவும் நிறைவாகவும் வளர்ந்துவிட்டன. இப்போதெல்லாம் மனிதர்கள் தமது சகமனிதர்களின் உறவுகளை நேசத்தை பாசத்தை புறக்கணிப்பதால் அவர்கள் வெறுமைக்குள் வாழ்வதை காணக்கூடியதாகவிருக்கின்றது. அதுமட்டுமல்ல இன்றைய காலத்தில் பிரிவு ஏக்கம் போன்ற உணர்வுகளை அனுபவிக்காத காரணத்தாலோ என்னவோ தொடர்ந்து சேர்ந்திருப்பது போன்ற உணர்வும் தொடர்ந்து சந்தித்துக் கொள்வது போன்ற உணர்வும் அதிகரிப்பதினால் மிக விரைவில் உறவுகளிற்கிடையில் சலிப்புத் தட்டுகின்ற தன்மையும் ஏற்படுகின்றது. முன்பு என்னோடு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு நிறைய கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். அதுமட்டுமல்ல பேனா நண்பர்களும் இருந்தார்கள். எனது கையெழுத்தும் நன்றாக இருந்ததாலோ என்னவோ பக்கத்துவீட்டுத் தாத்தா தனக்கு கடிதம் எழுதித்தரும்படி என்னை அடிக்கடி கூப்பிடுவார். கடிதத்தின் மீது முத்திரை ஒட்டும் போது முத்திரைக்கு எச்சில் போட்டு ஒட்டக்கூடாது என்று தாத்தா கூறுவார். முத்திரைக்கு பின்னால் தடவியிருக்கும் பிசின் போன்ற பசை உடல்நலத்திற்கு கெடுதல் விளைவிக்குமென்றும் தண்ணீரில் தடவி ஒட்டும்படியும் கூறுவார். அதை நான் செவிமடுத்ததாக எனக்கு ஞாபகமில்லை.

இன்று எல்லாம் கடிதங்கள் என்பது வெறும் விண்ணப்பங்களாகவும் வேலை சார்ந்தவையாகவும் தேவை கருதியும் மாறிவிட்டன. கடிதம் எழுதும் கலையானது எமது தலைமுறைபோடு இல்லாதொழிந்து அடுத்த தலைமுறைக்கு வெறும் காட்சிப்பொருளாக மாறிவிடும் என்ற நிலையை எண்ணும்போது வருத்தமாக இருக்கின்றது
சில கடிதங்களை ஒருதடவை படித்து செய்தியை அறிந்துவிட்டு பின்பு நேரம் கிடைக்கும் போது ஆறுதலாக இருந்து மீண்டும் வாசித்து இரைமீட்பது என்பது மனநிறைவையும் அளவில்லா ஆனந்தத்தையும் அள்ளித்தரும். வரிவரியாக அழகான கையெழுத்துக்களில் உள்ளத்தில் உள்ளதையெல்லாம் வார்த்தைகளாக கொட்டி எழுதிய காலங்கள் கரையேறிப்போய்விட்டன. இப்போது உயிரற்ற நான்கு வார்த்தைகளை மின் அஞ்சலில் எழுதிவிட்டு Take Care Bye என்று முடித்துவிடுகின்றோம்.

முகம் தெரிய விரும்பாத புரிந்துணர்வுடைய பரந்த சிந்தனையுடைய ஒரு நண்பருடன் என் மனதில் இருக்கின்ற எல்லாவற்றையும் கடிதமூலம் எழுதவேண்டும் அவரது பதில் எனக்குள் இருக்கின்ற ஏக்கங்களை ஏதாவது ஒரு வகையில் நிரப்புகின்றதா என்று பார்க்கவேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் சரியாக இன்னும் அமையவில்லை.
முன்பெல்லாம் எனது தந்தையார் வீட்டிற்குள் நுழையும்போதே எனக்கு ஏதாவது கடிதம் வந்ததா என்று கேட்டவண்ணமே வருவார். இப்போது எந்த எதிர்பார்ப்புமே இருப்பதில்லை.


நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது. எனக்கும் ஓர் கடிதம் வரவேண்டும் அவற்றை இரண்டு மூன்று தடவை வாசித்து மகிழவேண்டும். நானும் எனது அழகிய கையெழுத்தில் அந்தக் கடிதத்திற்கு பதில் அனுப்பவேண்டும் என்பது எனது சின்ன சின்ன ஆசைகளில் ஒன்று. ஏன் இந்த விபரீத ஆசை என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கின்றது.