செவ்வாய், 5 மார்ச், 2013

விலைமகளிர் எல்லாம்..... - வாழ்க்கை கவிதை

விலைமகளிர் எல்லாம்..... 

பிறர்க்கு உதவி இன்பம் காணும்
சிறு பிள்ளைவயதை நினைத்தே,
வாழ்ந்த இவளின் பருவம்
சமுதாய வீதியில் - சில கயவர்கள்
மடியில் தஞ்சும் புகுந்தது...

பட்டாம்பூச்சியாய் சிறகடித்து
பறந்த காலங்கள் வெறும்
கூட்டுப் புழுவானாள்!
கால் வயிற்று கஞ்சிக்கு காலம் தள்ள....
வயிற்றில் விளைந்த கருக்களும்
தரிசுநில வித்தாகிப் போனது!

ஒப்பிலா இன்பமுதை இரவுக் கூடலில்
தந்தவளின் உடலின்று முடங்கியது!
நுகர்ந்தோர் எல்லாம் நகர்ந்து போயினர்
அந்த நடை பாதை நுனியை யாரும் நாடவில்லை.....

அள்ளியெடுத்து முத்தமிட்ட மேனிக்கு
இன்று கொள்ளிவைத்து
பால் வார்க்க யாருமில்லை!
சமுதாயம் பெற்ற சந்தனப் பேழை
சாக்கடைப் பொருளாய் சிதறிக் கிடக்கிறது!

பட்டமரக் கிளை மீதமர்ந்த கழுகுக்கு
பிணவிருந்தாகி மடிந்து போனாள்!
அந்தோ!...... சமுதாயம் பெற்ற
விலைமகளிர் எல்லாம்
இளவேனிர்காலத்து உதிர்ந்த
சருகுகளே!

...........கா.ந.கல்யாணசுந்தரம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக