புதன், 27 ஆகஸ்ட், 2014

மனதைக் கவரும் மகா பாக்கியம்.

 இறைவனது அந்தப் புனித இல்லம் மங்கள ஒளிகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த மாளிகையின் காட்சியைக் கண்கள் இரண்டும் கொள்ளவில்லை. மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒளிவீசும் சொர்க்கத்து இல்லம் சுடர் விடும் காட்சி தன்னை எப்படிச் சொல்வோம்!



மதீனா நகரம் நோக்கி மாநபி ஸியாரம் காண, மகிழ்ச்சியுடன் சென்றோம். அங்கே! மலைகளாற் சூழப்பட்ட மாமதீனா தன்னில் மரஞ்செடி வளரக் காணோம். ஏகாந்தமாய் மலைகளெல்லாம் எங்குமே நிலைத்திருக்க, மஸ்ஜிதுன் நபவியாம் மாநபி பள்ளி காண மகிழ்ச்சியுடன் சென்றோம்.
வானத்தை அளந்திடும் வண்ணக் குடைகள் விரிந்து வரவேற்கும் மஸ்ஜிதுன் நபவி மின் தூபிகள் உயர்ந்து நின்று, துதி செய்யும் மக்களுக்குச் சோபனம் கூறுகின்றதோ? தூதர் நபியின் சொர்க்கத்து மாளிகை போன்று எண்ணிக்கை இல்லாத் தூண்களாலான எத்தனை பெரிய மாளிகை அந்த மஸ்ஜிதுன் நபவி.ஜென்னத்துல் பகியை எப்படிப் பார்ப்போமென்று எல்லோரும் ஓடிச் சென்று எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ரெளழா ஷரீபின் அருகே சந்தோஷ வெள்ளம் பொங்க, வெள்ளைக் கம்பளத்து விரிப்பிலே! இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்துத் தொழுதிடும் காட்சி எத்தனை பிரமாண்டம்.கண்கள் கொள்ளா அழகினைக் கண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழியினைப் பின்பற்றும் இத்தனை இலட்சம் மக்களும் இன்னும் இன்னும் இங்கேயே இருப்போமா என்று எண்ணத் தோன்றும். அந்த மஸ்ஜிதுந் நபவிப் பள்ளியில் 2 வக்துக்களை மட்டும் அங்கு தொழுதுவிட்டு, மிகாத்
வை நோக்கி வந்தோம் . இங்கிருந்து இஹ்ராம் பத்திரமாய் மக்கா, வந்தோம்.வெயில் கொளுத்தும் வெட்ட வெளியிலே, கஃபத்துள்ளாவைச் சுற்றி மக்கள் வெள்ளம் பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றது. புற்றிலிருந்து புறப்படும் ஈசல்களைக் கூடக் கணக்கிடலாம். ஆனால் கஃபாவைச் சூழும் மனித உருவங்களுக்கு எண்ணிக்கையே இல்லை! மஃஷர் மைதானத்தை நினைவு கூரும் அந்தச் சம்பவம் மனதைக் கவரும் மகா பாக்கியம்.
கஃபாவைச் சுற்றி மக்களின் வெள்ளப்பெருக்கு. அந்த வெள்ளப்பெருக்கிற் சிக்குண்டு, நெரிசலில் சிக்குண்டு முண்டியடித்த பலபேரில் நாங்களும் ஹஜறுல் அஸ்வத். ருக்குனுல் யமானி, மகாமு இப்றாஹீம், ஹிஜ்லுல் இஸ்மாயீல், கஃபாவின் கதவு தங்கப் பீலி இவற்றை எல்லாம் ஏழுமுறை வலம் வந்து, இதயம் குளிர்ந்து இறைனிடம் இறைஞ்சி துவாக் கேட்போம்.
ஹரத்தை வலம் வந்து இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்துத் தொழுது, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி விட்டுச் ஸம், ஸம் நீரை வயிறார அருந்திவிட்டு சபா, மர்வாவை நோக்கிப் புறப்படுகின்றோம் ஸஈயை நிறைவேற்ற அங்கே அன்னை ஹாஜராவின் தியாக சிந்தையும் எம்மாத்திரம் என்ற நினைவுடன் தொங்கோட்டத்தை முடித்துக் கொண்டோம். மண்ணை நிகர்த்த மக்கள் கூட்டத்தினருடன் நாமும் நடக்கின்றோம்’ நன்மைபெற (இன்னஸ் சபா வல் மர்வத்த ஸஆயிரில்லா) என்ற தூய கலிமாவின் துணை கொண்டு உம்ராவின் கடமையை அத்துடன் முடித்துக்கொண்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக