வெள்ளி, 5 டிசம்பர், 2014

அழகாக்கும் ஆசை

 நன்றி :வெ.இறையன்பு இ.ஆ.ப. - கட்டுரைகள்
 
நம் எல்லோருக்குமே அழகாக தோன்ற வேண்டும் என்று ஆசை!

சிலருக்கோ தாம் மட்டுமே அழகென்று திடமான நம்பிக்கை. அழகு என்பது சிலருக்கு நப்பாசை. சிலருக்கு அது ஒத்தாசை.

எவ்வளவு முயன்றாலும் ஒரு சதவிகிதம்கூட நம் முகத்தை மாற்ற நம்மால் முடியாது. இயற்கை நம்மை படைத்த விதத்தை சிகை திருத்தி, முகம் கழுவி செம்மைப்படுத்த மட்டுமே இயலும். ஆனாலும் எதையாவது செய்து நாம் அழகாகி விட மாட்டோமா என்ற எதிர்பார்ப்புகள் ஏராளம்!

இருக்கிற முகத்தை அசிங்கமாக்காமல் பார்த்துக்கொள்ள நம்மால் முடியும். இயல்பாக இருக்கிறபோது நாம் எல்லோருமே அழகுதான். கோபப்படுகிற போது நாம் அசிங்கமாக தோன்றுகிறோம் என சிலர் சொல்வதுண்டு.

கோபப்பட வேண்டிய இடத்தில் உணர்வுகளை விழுங்கிக்கொண்டு அமைதி காப்பதுகூட அருவருப்புதான். நியாயமான கோபங்களும், சமூகத்தில் நடக்கும் அவலங்களின் மீது ஏற்படும் கோபங்களும் முகத்தை சிவப்பாக்கும்போது ஏற்படும் கம்பீரம் நம்மை அழகாக்குகிறது.

பலவீனமானவர்கள் மீது சிறுபிள்ளைத்தனமாக கொள்கிற கோபம் முகம் முழுவதும் ஓடுக்கல்களை உண்டாக்குகிறது.

அழுகிறபோது மனிதன் அழகை இழந்துவிடுகிறான் என்று சொல்பவர்கள் உண்டு. வாய் கோணலாகி, கன்னங்கள் புடைக்க, சக்தியற்று வெளிப் படும் அழுகையில் பரிதாபம் தோன்றுமே தவிர அழகு ஏற்படாது என்று வாதிப் பவர்களும் இருக்கிறார்கள்.

நெஞ்சை உலுக்கும் சோகத் தில் மௌனமாக, ஆரவாரம் செய்யாமல், தன் கண்ணீர் துளிகளை இரங்கற் கவிதையாக மாற்றுகிற மனிதர்கள் அழுகையைக்கூட அழகாக்கிவிடுகிறார்கள். அதில் அன்பு, பாசம், இயலாமை, வருத்தம், பிரிவு, அக்கறை ஆகிய அனைத்து உணர்வுகளும் பிரதிபலிக்கின்றன.

அழகாக்கும் ஆசையில் நிறைய ஒப்பனைகள் செய்கிறபோது நம்மையும் அறியாமல் நம் அழகை இழக்கிறோம். நம் இயல்பு தன்மையுடன் ஒட்ட மறுக்கின்ற அவை, ஒட்டவைத்த மலர்களைப் போல் மணம் பரப்ப மறுக் கின்றன. சின்னக் குழந்தைகள் வெட்கப் படும்போதுகூட நம் மனதில் மகிழ்ச்சி தூரல் தெளிக்கப்படுகிறது. இயல்பான உணர்வுகள் தான் எப்போதுமே முகத்தில் அழகையும், ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.

உண்மையிலேயே மனித முகங்களை கவனிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அசிங்கமாக தோன்றுவது கொட்டாவி விடும்போதுதான் என்பதை புரிந்துகொள்வார்கள். படுக்கை அறையில் விடுகிற கொட்டாவியை காட்டிலும், பள்ளியில் விடுகிற கொட்டாவி அதிகஅசிங்கத்தை கொடுக்கும். கண்களின் துடிப்பையும், முகத்தின் வசீகரத்தையும், உதடுகளின் இருத்தலையும், கன்னங்களின் செழுமையையும் கொட்டாவி ஒரே நொடியில் களவாடிவிடுகிறது.

சோம்பலும், மந்தத்தனமும் கொட்டாவிகளை பிரசவிக்கின்றன. சுறுசுறுப்பான முகங்களும், துருதுருவென தெரியும் வெளிப்பாடுகளுமே, அருகில் இருப்பவர்களையும் ஆனந்தப்படுத்துகின்றன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக