செவ்வாய், 9 அக்டோபர், 2012

முடிவும் தொடக்கமும்

ஒவ்வொரு யுத்தத்துக்குப் பிறகும்
யாராவது
ஒழுங்கப்படுத்த வேண்டியிருக்கிறது.
யாராவது கட்டிடச் சிதிலங்களைப்
பாதையோரம் ஒதுக்கவேண்டியிருக்கிறது
அதனால்
பிணங்கள் நிரம்பிய வண்டிகள் கடந்துபோகும்.
யாராவது
சகதி சாம்பலின் ஊடே
சோபா ஸ்பிரிங்குகளின் ஊடே

இரத்தம் படிந்த கந்தலின் ஊடே சிரமப்பட்டு நடக்க வேண்டியிருக்கிறது.
சுவரை தூக்கி நிறுத்த
யாராவது
கம்பத்தைப் பிடுங்க வேண்டியிருக்கிறது
யாராவது
ஜன்னலுக்குக் கண்ணாடி போட வேண்டியிருக்கிறது
கதவை அதன் சட்டத்தில் பொருத்த வேண்டியிருக்கிறது.
வலுவான பிடிப்பு எதுவுமில்லை
புகைப்பட வாய்ப்பு எதுவுமில்லை
அநேக வருடங்கள் ஆகின்றன.
எல்லா காமிராக்களும்
வேறு யுத்தங்களுக்கு போய்விட்டன
பாலங்கள் புனரமைக்கப்பட வேண்டும்
புகைவண்டி நிலையங்களும்
சட்டைக் கைகள் கந்தலாகச் சுருட்டப்படும்
யாராவது கையில் துடைப்பத்துடன்
எப்படி இருந்தது அது என்று
இன்னும் நினைவு கூர்கிறார்கள்.
வேறு யாராவது
நொறுங்கிப் போகாத தம் தலையசைத்து
அதைக் கேட்கிறார்கள்.
ஆனால்
அதை ஓர் அலுப்பாக நினைக்கும் பிறர்
அருகிலிருந்து பரபரப்பார்கள்.
காலம் காலமாக
யாராவது
துருப்பிடித்த விவாதத்தைப் புதரடியிலிருந்து
நிச்சயம் தோண்ட வேண்டியிருக்கும்
வாரிக் கொட்ட வேண்டியிருக்கும்.
இவையெல்லாம் தெரிந்தவர்கள்
கொஞ்சம் தெரிந்தவர்களுக்கும்
அவர்கள் அதைவிட சொற்பமாக தெரிந்தவர்களும்
கடைசியில் எதுவுமே தெரியாதவர்களுக்கும்
வழிவிட வேண்டியிருக்கும்.
காரணங்களையும் விளைவுகளையும்
மூடிய புல்வெளியில்
சோளத்தண்டை பற்களில் கடித்தப்படி
மேகங்களை மிரண்டு பார்த்துக்கொண்டு
யாராவது பொய்சொல்ல வேண்டியிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக