ஞாயிறு, 7 அக்டோபர், 2012

நவீனத்துவம் – எழுத்தின் இறைத்துவம்

ஒரு எழுத்தாளனின் லட்சிய சாசனம்

(1950ஆம் ஆண்டில் வில்லியம் ஃபாக்னர் நோபல் பரிசு பெற்ற போது அளித்த உரை)
தமிழாக்கம் : தி.க.சி

இந்த பரிசானது மனிதன் என்ற முறையில் எனக்கு வழக்கப்பெறுவதாக நான் கருதவில்லை. புகழுக்காகவோ, லாபத்திற்காகவோ அன்றி, மனித ஆன்மா என்னும் பொருளில் இருந்து இதுவரையில் இல்லாத முறையில் ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், என் ஆயுள் முழுவதும் ஆன்ம வேதனையிலும் உழைப்பிலும் நான் உருவாக்கிய ஷ்ரிஷ்டிக்காக இப்பரிசு அளிக்கப்படுகிறது என கருதுகிறேன்.
எனவே, ஒரு அறநிதி என்ற முறையில் தான் இந்த பரிசு என்னுடையது.
இந்த பரிசின் குறிக்கோளுக்கும், தோற்றுவாய்க்கும் ஏற்ப, இதில் உள்ள
பணத்தை ஒருவருக்கு காணிக்கையாக்குவது கடினமான காரியமல்ல. ஆனால், நான் அதை சீரிய முறையில் செய்ய விரும்புகிறேன். இந்த விநாடியை நான் நிற்கும் புகழின் சிகரமாக பயன்படுத்த ஆசைப்படுகிறேன். என்னை போன்று வேதனையும் விசாரமும் நிறைந்த ஷ்ரிஷ்டிப்பணியில் தம்மை ஈடுபடுத்தியுள்ள இளைஞரும் குமரியும் என் பேச்சை செவிமடுக்க வேண்டும் என்பதற்காக, நான் இச்சிகரத்தில் நிற்கிறேன். அவர்களில் ஒருவர் இதே சிகரத்தில் நிற்கக்கூடும்.
இன்று நமது அவலம் என்னவெனில், பொதுவான உலகு தழுவிய மரண பயம் ஆகும். இதை பலகாலம் சுமந்து வந்தோம்; இப்பொழுது அனுபவிக்கவும் திராணி பெற்றுவிட்டோம்!
இன்று நம்மை வருத்திவருவது, ஆன்மாவின் பிரச்சனைகள் அல்ல. ஒரே ஒரு கேள்வி தான் நம்முன் நிற்கிறது. ‘நான் எப்பொழுது தூள் தூள் ஆவேன்?…’ எனவே இன்றைய இளம் எழுத்தாளனோ, எழுத்தாளியோ தன்னுடன் தானே போராடிக்கொண்டிருக்கும் மனித இதயத்தின் பிரச்சனைகளை மறந்துவிட்டார்கள். இத்தகைய உள்மனப்போராட்டம் தான் சிறந்த படைப்பை நல்க இயலும், ஏனெனில், இது தான் எழுதுவதற்கு ஏற்ற விஷயம்; நமது உழைப்பிற்கும், மனவுளைச்சலுக்கும் உகந்த விஷயம்.
அவன் – இன்றைய இளம் எழுத்தாளன் – மறந்துவிட்ட இந்த இதய பிரச்சனைகளை மீண்டும் கற்க வேண்டும்.
அச்சம் தான் அனைத்திலும் அற்பமானது என்பதை அவன் தன் மனதிலும் ஆழப்பதித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், அவன் அச்சத்தை அறவே மறந்துவிட வேண்டும். அவனது “பட்டறை”யில், “தொழிற்கூடத்தில்” பழம்பெரும் இதய உண்மைகளே நிரம்பியிருக்க வேண்டும். அந்த அனாதையான மெய்ப்பொருள்கள் இல்லாவிடில், அன்பும், தன்மானமும், இரக்கமும், பெருமையும், கருணையும், தியாகமும் ஆகிய மெய்ப்பொருள்கள் இல்லாவிடில், அவனது எந்தப்படைப்பும் கணப்பொழுதில் நசித்து ஒழிந்து போகும். இதை உணர்ந்து செயல்படாதவரையில், அவன் உழைப்பெல்லாம் சாபத்தீடு தான்!
இன்றைய இளம் எழுத்தாளன் காதலைப்பற்றி எழுதவில்லை; காமத்தைப் பற்றி எழுதுகிறான்; மதிப்பு எதையும் எவரும் இழக்காத தோல்விகள் பற்றி
எழுதுகிறான்; எல்லாவற்றிலும் கீழாக இரக்கமோ, கருணையோ, இன்றி எழுதுகிறான். அவனது துன்பங்கள் உலக அறங்களின் துன்பங்கள் அல்ல; அவை வடுப்படாத துன்பங்கள் ! அவன் இதயத்தை பற்றி எழுதவில்லை; சுரப்பிகளை பற்றி எழுதுகிறான். நான் மனிதனின் அழிவை ஏற்க மறுக்கிறேன். மனிதனுக்கு தாங்கும் சக்தி உண்டு என்பதற்காக, அவனை அமரன் என்று அழைப்பது எளிது.
அழிவின் கடைசி மணியோசை, சிவந்த மரணமுலாம் பூசப்பெற்ற அந்திப்போதில், அலைகளின் அரவமற்று வெறிச்சோடி நிற்கும் பாரையில் மோதி, மெல்லத்தேய்கிறது; அவ்வேளையில் கூட ஒரு ஒலி கேட்கும், மனிதனின் அழிக்க இயலாத  மெலிந்த பேச்சுக்குரல் கேட்கும் !…
நான் இக்கருத்தை ஏற்க மறுக்கிறேன். மனிதனால், அழிவைத்தாங்கிக்கொள்ள மட்டுமல்ல; வெற்றிக்கொள்ளவும் முடியும் என்பது என் கருத்தாகும். ஜீவராசிகளில், அவனது குரல் மட்டும் வற்றி வறண்டு, மாய்ந்து மடிந்து போகாமல் இருப்பதால், மனிதன் அமரனல்ல. அவனுக்கு ஆன்மா இருப்பதால், கருணையும் தியாகமும் பொறுமையும் பொருந்திய ஆன்ம சக்தி இருப்பதால், அவன் அமரன்.
ஒரு கவிஞனின், எழுத்தாளனின் கடமை இவ்விஷயங்களை பற்றி எழுதுவது ஆகும். மனிதனின் இதயத்தை புனிதமாக்கி, தொன்மைப்புகழ் சேர்க்கும் துணிச்சலையும், தன்மானத்தையும், பெருமிதத்தையும், நம்பிக்கையையும், கருணையையும், இரக்கத்தையும், தியாகத்தையும் நினைவூட்டி, இடுக்கண்களை தாங்கும் வலிமையை அளித்தல் எழுத்தாளனின் உரிமையாகும்.
கவிஞனின் குரல், மனிதனைப்பற்றிய ஒலிப்பதிவாக மட்டுமின்றி, ஊன்றுகோலாகவும், உரம் மிக்க தூணாகவும் உற்றுழி உதவுமாக மனிதனுக்கு (அழிவைத்) தாங்கும் ஆற்றலையும், வென்று வாழும் வலிமையையும் நல்குமாக.

1 கருத்து:

  1. வலைப்பதிவிற்கு வருகை தரும் தோழமைக்கு, நன்றாய் இல்லையென்று சொல்.
    வாசித்துவிட்டு ஒதுக்கப்படவேண்டியவை என்று கூறு.
    நிராகரிக்காதே. கூர்விமர்சனம் தீட்டி மீண்டும் வர வேண்டும் நீ.
    காத்திருப்பேன்.
    நன்றி.
    நல்லூர் உஸ்மான்

    பதிலளிநீக்கு