சனி, 10 மே, 2014

கல்வி காலத்தின் நிர்பந்தம்

இந்த மண்ணில் மானிட சமுதாயம்  தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. மிருகங்களாக வாழ்ந்த மனிதன் தமது பட்டறிவால் பலவற்றைக் கற்று மெல்ல வாழும் வகை அறிந்து கொண்டான். வயிற்றுக்கு மட்டுமே உணவிட்டு வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் அறிவின் எல்லையை விரிவுப்படுத்த முயன்றபோது பிறந்ததுதான் கல்வி.
வெந்தழால் வேகாத, வேந்தரால் கொள்ளத்தான் முடியாத, அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியான கல்வியின் மேண்மயினை எல்லா மொழிகலும் போற்றியிருப்பினும் நம் தேன்தமிழோ வானளவு உயர்த்தியிருக்கிறது.
மனித உயிர்கள் சீரிய ஒழுக்கச் செறிவோடும் பண்பாட்டு அறநெறிகளோடும் வாழ்வியலில் சிறந்தோங்க உறுதுணையாய் விளங்கிவந்த கல்வியானது இன்று பெரும்பாலோரால் திசைமாற்றப்பட்டு வாழ்க்கையோடு ஒட்டாத வெறும் ஏட்டுக்கல்வியாய் மட்டுமே விளங்குகின்றது.
வள்ளுவன் சொன்ன ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற மெய்யெல்லாம் இன்றைய மக்களிடத்தே பொய்மையாய் வாழ்கிறது. ‘பயிற்று பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்’ என்றானே பாரடி அதையும் தவறாகப் புரிந்து கொண்ட நம்மில் படித்த பலர் ‘பாரை(bar)’ உயர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
நட்புறவோடும், அன்போடும், பண்போடும் ஆக்கரமான மேம்பாட்டோடும் உயிர்கள் பிழைக்கவும் தழைத்து வாழவும் பயன்பட வேண்டிய கல்வியானது இன்று பலரின் மத்தியிலே வெறும் வயிற்றுப் பிழைப்பாய் போனதே விந்தைதான். படித்தவன் மத்தியிலே பொய் பித்தலாட்டங்கள், வஞ்சகச் சிந்தனைகள், அநீதிகள் பல்கிவிட்டன. உயிர் பிழைக்கப் பெறவெண்டிய கல்வியை சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக பெற்றதின் பயனாக குமுகாயம் முழுமையாக தீங்கிழைக்கும் கொடும் பிணி பரவியுள்ளது.
‘படிப்பு வளருது, பாவம் தொலையுது; படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான் ஐயோவென்று போவான்’ என்று பாரதி சொன்னது பேருண்மை. அன்று தொட்டு படித்தவர்களை மக்கள் முழுமனதோடு நம்புகிறார்கள். ஆதலால் படித்தவர்கள் கீழான எண்ணங்களும் செயல்களும் கொள்ளலாகாது. கல்விக் கற்பதின் உன்னத நோக்கம் புரியாதக் காரணத்தால் வயிற்றுப் பிழைப்புக்காக கற்கும் நிலையில் இன்று மெத்தப் படித்த பலர் சாதாரண மக்களுக்கு எதிராகச் சூது செய்து கொண்டுதான் வருகின்றனர்..
‘கல்வி என்பது ஆன்மாவில் ஏற்றப்படும் ஒரு ஒளி; அணையாது ஒளிவிடும் ஒளி. கல்வி, மனிதனின் பொறி புலங்அளுக்கு அர்த்தம் கற்பிப்பது; படைப்பாற்றலை வழங்குவது; அறிவியல் ஆளுமையை வழங்கி மனிதனை முழுமைப்படுத்துவது; மானுடம் வெற்றி பெறத் துணையாய் அமைவது’ என்றார் குன்றக் குடியடிகளார்.
இன்றைய கல்வி முறையோ மனித மூளையில் செய்திகளைத் திணீப்பதும் நினைவாற்றலை சோதிப்பதிலேயே நின்றுவிடுகிறது. கற்கும் மாணாக்கனிடத்தே தனம்பிக்கை, திறமை, ஆளுமை அனைத்தும் குறுகிப்போய் நாளை வேலையைப் பற்றிய கனவே பெரிதாய் நிற்கின்றது.
‘வயிறு பிழைக்கக் கற்பதல்ல கல்வி உயிர் செழிக்கக் கற்பதே கல்வி’ என்று வள்ளலார் கருத்துக்கேற்ப சிறந்த கல்வியானது பெருமையைத் தரும், புகழைத் தரும், நாளைய வாழ்க்கை ந்ன்முறையில் அமைய ஆக்ககரமான அறிவாண்மையைத் தரும்.

உங்களுக்கு யாரும் சொல்லித் தராததை சொல்லப் போவதில்லை. இவை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், தெரிந்திருப்பின் கட்டுரையை புறக்கணித்து விடுங்கள். தெரியாதிருப்பின் கவனித்துக் கொள்ளுங்கள். நான் விஞ்ஞானி இல்லை. வேறு எந்த ஞானமும் கைவரப்படவில்லை. என்  வயதில் நான் ஊன்றி கவனித்து பழகியவைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விருப்புகிறேன். எனவேதான் கற்றுத்தருகிறேன் என்ற கர்வம் காட்டுவதுகூட செய்யாதிருக்க தோன்றியது. அனுபவ பகிர்தலை அவசியமான பாடம் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது.

கற்றுக் கொள்வது என்பது தனி மனித வளர்ச்சி என்பது மட்டுமல்லாது, சமூக வளர்ச்சியாகவும் கருதப்படும். வளர்ச்சி தலைமுறை தலைமுறையாக வளரும் விஷயம். இந்த வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒரு நிர்பந்தம். நாம்  கம்ப்யூட்டர் தெரிந்து கொள்ளாமலேயே மத்திம வயதை தாண்டி விட்டோம் . நம்  பிள்ளை கற்றுக்கொண்டே ஆகவேண்டும், இல்லாவிடில் அவன் வாழ்க்கை சிக்கலாகும். இது அவனுக்கு ஏற்பட்ட நிர்பந்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக