வியாழன், 31 ஜூலை, 2014

மழையே! உனக்கொரு மடல்!



நன்றி : கவிஞர் வாலி 


மாண்புமிகு மழையே! உனக்கொரு
மடல்! நீ
எவ்வளவு பெய்தாலும்
ஏற்க வல்லது
கடல்கொண்ட
குடல்;
ஏற்க
ஏலாதது
குடல் கொண்ட
உடல்!
நீ பெய்யலாம்
நூறு அங்குலம்; அன்னணம்
பெய்தால் என்னணம்
பிழைக்கும் எங்குலம்?
அடை மழையே!
அடை மழையே! உன்
மடையை உடனே
அடை மழையே!
கொடுப்பதும் மழை;
கெடுப்பதும் மழை;
இது
இரண்டாயிரம் ஆண்டுகள் முன்
தாடி வைத்த தமிழ்
பாடி வைத்த தமிழ்!
அளவோடு பெய்தால்
உன்பேர் மழை;
அளவின்றிப் பெய்தால்
உன்பேர் பிழை!
தாகம் _
தணிய....
உன்னைக் குடித்தோம் என்றா
எங்கள்
உயிரை நீ குடிக்கிறாய்?
மழைக்கே தாகமா? _ எமனுக்கு
மற்றொரு பெயர் மேகமா?
சவத்தைக் குளிப்பாட்டினால் அது
சடங்கு; நீ
குளிப்பாட்டியதால் நிரம்புகிறதே சவக்
கிடங்கு!
நீரின்றி
நிற்காது உலகு; எங்கும்
நீராகவே இருந்தாலும்
நிற்காது உலகு!
பூகம்பம்;
புகைவண்டி;
புயல் வெள்ளம்;
என
ஏனிப்படி...
குஜராத்தைக்
குறி வைத்து
இடையறாது தாக்குகிறது
இயற்கை? உன்னொத்த
இயற்கையைத் தண்டிக்காது
இருப்பதேன் இறைக்கை?
விண்ணிலிருந்து
வருவது தண்ணீர்;
கண்ணிலிருந்து
வருவது கண்ணீர்;
எனினும்
எஞ்ஞான்றும்
தண்ணீரைப் பொறுத்தே
கண்ணீர்!
தெய்வம்
தொழாது
கொழுநன்
தொழுவாளைப் போலே...
மழையே!
மாந்தர்
பெய் எனும்போது
பெய்; உனது
பெயரை என்றும்
பெயராமல் வை! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக