புதன், 23 டிசம்பர், 2015

கிராமங்கள்தோறும் துயரம்

 

 

-இளங்கோவன்

பாழடைந்த அந்தக் கிராமத்து
நூலகத்தில்
புத்தகங்களுக்கிடையே சில சிலந்திகள்
தனது நூல் வெளியீடுச் செய்வதை
நூலகக் காப்பாளர் இன்றுவரையிலும்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அப் புத்தகங்களில்
ஒரு புத்தகத்தில் காதல் கடிதம் ஏதேனுமிருக்கும்
ஏதேனும் ஒரு புத்தகத்தில்....
மளிகைக் கடன் பாக்கிகள் எழுதப்பட்டிருக்கும்.
ஏதேனும் ஒரு புத்தகத்தில்
ஏதேனும் ஒரு மயிலின் இறகு
பிரசவ வேதனையிலிருக்கலாம்
ஏதேனும் ஒரு புத்தகத்தில்
மாதவிடாய் நாட்கள் குறிப்பெடுத்திருக்கலாம்.
ஏதேனும் ஒரு புத்தகத்தில்
கருக்கலைத்த இரகசியக் குறியீடுகளுமிருக்கலாம்.
ஏதேனும் ஒரு புத்தகத்தில்
கணவனை இழந்தவளின் காமத்தேவைகளுமிருக்கலாம்.
யார் கண்டது.
எங்கள் கிராமத்தில்
படித்தப் பெண்கள் ஏராளம்...
நகுலனையும் படித்திருப்பார்கள்
பாரதியையும் படித்திருப்பார்கள்..
வண்ணதாசனை படித்து
கனவுத்தாசனை தேடியிருப்பார்கள்.
ராணி,தேவி,முத்தாரம், கல்கி படித்து
ஓர் அமாவசை இரவில்
யாருமற்ற இடத்தில்
கவி நிலவை வரைந்திருப்பார்கள்.

எங்கள் கிராமத்தில்
நூலகப்
புத்தகங்கள் மட்டுமல்ல
இல்லத்துப்
பெண்மணிகளும்
பயன்படுத்தப்படாமலே
ஒதுக்கப்படுகிறார்கள்.
இன்னும் வாழும்
கொடும்
ஆணாதிக்கவாதிகளாலும்
ஜாதி
ஆதிக்கவாதிகளாலும்.!

எந்தக் கிராமம்
இந்தக் கிராமம்
என தேடாதீர்கள்..

எல்லா கிராமத்திற்கும்
பெரியார் அம்பேத்கார்
தேவைப் படுகிறார்கள்..

- thanks to

* இளங்கோவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக