வியாழன், 25 டிசம்பர், 2014

புத்தாண்டு...




உன்னிப்பாக வாழ்பவர்களுக்கு ஒவ்வொரு நாளுமே புத்தாண்டுதான். இன்று ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ளாவிட்டால், இந்த நாள் காலண்டரில் மட்டுமல்ல, நம் வாழ்க்கை குறிப்பில் இருந்தும் கிழித்து எறியப்பட்டதாகத் தான் பொருள். நாளை புதுப்பிக்க நம் வாழ்வை செறிவுபடுத்த வேண்டும். முதல் நாளன்று கொண்டாடுவதோடு புத்தாண்டு முடிந்து விடுவது இல்லை.

இந்த புத்தாண்டில் நம்மை நாம் எந்த வகையில், நம்மையே தாண்டிச் செல்லப் போகிறோம் என்பதுதான் முக்கியம். தொழிலதிபர்கள் அடுத்த ஆண்டுக்குள் எத்தனை புதிய தொழில்களை தொடங்குவது என்று திட்டமிடுவார்கள். இலக்கியவாதிகள் இன்னும் எத்தனை நூல்களை எழுதி முடிப்பது என்று அறுதியிடுவார்கள். விஞ்ஞானிகள் எத்தனை புதிய நுணுக்கங்களை கண்டுபிடிப்பது என்று வியூகம் வகுப்பார்கள். பெற்றோர்கள் எதில் முதலீடு செய்யலாம் என திட்டம் போடுவார்கள்.

இப்படி எல்லோருக்குமே ஒரு கனவும், ஆசையும் உண்டு. இதுபோல் மாணவர்களாகிய நாமும் ஏதாவது ஒரு விஷயத்துக் காக சங்கற்பம் செய்தால்தான் இந்த புத்தாண்டுக்கு ஓர் அர்த்தம் இருக்கும். பள்ளி இறுதித்தேர்வுக்கு படிக்கிறவர்கள், ‘அடுத்த கல்வி ஆண்டில் நாம் விரும்புகிற கல்லூரிப் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும்’ என நினைப்பது ஓர் இலக்கு. கல்லூரியில் கடைசி ஆண்டு படிப்பவர்கள், ‘நல்ல பணியில் சேர்ந்திட வேண்டும்’ என எண்ணுவது ஒரு சங்கற்பம். ஆனால் எண்ணுவது மட்டுமே வெற்றியை வரவழைத்து விடாது. அதற்கு தகுந்தபடி நம் நடவடிக்கைகளும் இணை குதிரையின் ஓட்டமாய் இருக்க வேண்டும்.

நம்மால் எட்ட முடிந்தவற்றை குறிக்கோளாக்கி கொண்டு அவற்றை நோக்கி ஒவ்வொரு நாளும், அழுத்தமாக அடியெடுத்து வைக்க வேண்டும். ‘நான் 50 தலைசிறந்த புத்தகங்களையாவது படித்து முடித்து விடுவேன்’ என்று வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். ‘நல்ல பொழுதாக்கத்தை கற்றுக் கொள்வேன்’ என சூளுரைக்கலாம். ‘ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் தேர்ச்சி பெறுவேன்’ என சபதம் ஏற்கலாம். ‘25 மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பேன்’ என்று நிச்சயம் செய்து கொள்ளலாம்.

இப்படி, ஏதேனும் ஓர் உயர்ந்த உறுதிமொழியை மனதில் எழுதி அதை கடைப்பிடித்தால், அந்த ஆண்டு முடிகிறபோது, நம்மையும் அறியாமல் நாம் மிகப்பெரிய மகிழ்ச்சிக்கு சொந்தக்காரர்களாகி விடுவோம். நேரத்தை முறையாகப் பயன்படுத்திய நிம்மதியும், திருப்தியும் ஏற்படும். இந்த புத்தாண்டில் எப்படி நம்மை நாமே புதுப்பிக்கப்போகிறோம் என்பதில்தான், புத்தாண்டை நாம் எதிர்கொள்ளும் சாராம்சம் அடங்கி இருக்கிறது

From
http://kalvianjal.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AF%86.%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%87.%E0%AE%86.%E0%AE%AA.%20-%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Our thanks to
வெ.இறையன்பு I.A.S.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக